அமித் ஷாவின் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தும்: தமிழிசை பேட்டி

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அதன் விவரம்:
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை குறித்து சொல்லுங்கள்...
அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும்.
பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர் வரை கட்சியை எவ்வளவு எடுத்துச் சென்றிருக்கிறோம் என தேசியத் தலைவர் உணர்ந்திருக்கிறார்.
 40 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்படும் நிகழ்ச்சியாக இருக்கும். பணம் கொடுத்து யாரையும் அழைத்து வர மாட்டோம். 5 வாக்குச்சாவடிகளில் பணி செய்துகொண்டிருக்கும் எங்கள் நிர்வாகிகளை மட்டுமே அழைத்திருக்கிறோம். தமிழகத்தில் வேறு கட்சிகளால் இதனைச் செய்ய முடியாது.
யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கூட்டத்தைக் கூட்டுவது எங்கள் நோக்கமல்ல. வெளித் தோற்றத்திற்காக அல்ல. கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி. அந்த நிர்வாகிகள் ஈசிஆர் கோல்டன் பீச் ரிசார்ட்டில் தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்திக்கின்றனர்
அமித் ஷா வருகையின்போது கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை இருக்குமா?
இது கட்சி ரீதியான கூட்டம் மட்டும் தான். அரசியல் ரீதியான கூட்டம் அல்ல. அதனால் கட்சி ரீதியான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே இருக்கும். அமைப்பு ரீதியான பலம் இருந்தால் தான் அரசியலை சந்திக்க முடியும். அதனால் அந்த அஸ்திவாரத்தைப் பலம் பொருந்தியதாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.
கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்?
நாடாளுமன்றத் தேர்தலுக்கென ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் உள்ள 11 பேருக்கும் ஒவ்வொரு பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பது, எதிர்க்கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அக்குழு கலந்தாலோசிக்கும். அதன்பின்பு தான் வியூகங்கள் வகுக்கப்படும்.
பாஜகவின் பலம், பலவீனமாக எதைப் பார்க்கிறீர்கள்?
பலம் அமைப்பு ரீதியான வேலை. எங்கள் கூட்டத்திற்கு ஒருவர் வந்தாலும் அது 1000 பேரின் வேலை. கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்கள் தான் எங்கள் பலம்.

Share:

ஸ்டாலின் செயல்படாத தலைவர்; உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்: அழகிரி பேச்சு

ஸ்டாலின் செயல்படாத தலைவர். உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என்று மு.க.அழகிரி பேசினார்.
பாலமேடு அருகே தன் ஆதரவாளர் மதுரை வீரன் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்ட அழகிரி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், ''நான் மதுரையிலிருந்து திருமண விழாவிற்கு வருகின்றேனா அல்லது கட்சி நிகழ்ச்சிக்கு வருகின்றேனா என்று தெரியாமல் எனக்கு வரவேற்பு, பேனர்கள், மாலை மரியாதை செய்யும்போது பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது. திமுகவில் இப்போது உள்ளவர்கள் பதவிக்காகவே உள்ளனர். அவர்கள் உண்மையாகவே கட்சிக்கு உழைக்காதவர்கள். செயல்படாத தலைவர் செயல் தலைவராக சென்னையில் உள்ளார். செயல்படுகிற வீரர்கள் இங்குதான் உள்ளனர்'' என்று அழகிரி பேசினார்.
முன்னதாக, தென் மாவட்ட திமுகவில் மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தபோது, இடைத்தேர்தலுக்கு தனி ஃபார்முலாவையே உருவாக்கினார். திமுக 2016-ம் ஆண்டு தேர்தலில் தோற்ற பிறகு அழகிரிக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது. அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சேர்ந்தனர். அழகிரியும் அரசியலில் ஆர்வமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறார். அதனால் அவரது ஆதரவாளர்களும் அமைதியாகி விட்டனர். திமுகவினர் அழகிரியைக் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் திருமண விழாவில் கலந்துகொண்ட மு.க.அழகிரி, ‘ஸ்டாலின் செயல்படாத தலைவர். உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்’ என்று கூறியிருப்பது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share:

ஜியோவின் பிராட்பேண்ட் சேவை விரைவில் வருகிறது: ‘ஜியோ ஜிகா ஃபைபர்’, ஜியோபோன்-2

இலவச வாய்ஸ் கால், டேட்டா ஆகியவற்றை வழங்கி தொலைத்தொடர்பு சந்தையை அதிரவைத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்ததாக அதிவேக பிராட்பேண்ட் சேவையில் இறங்குகிறது.
வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் அதிவேகமாக இன்டர்நெட் சேவையை வழங்கும் பிராட்பேண்ட் சேவையை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி 1,100 நகரங்களில் ஒரே நேரத்தில் தொடங்குகிறது.
 
அதுமட்டுமல்லாமல், ஜியோ போன்-2 என்று அறிமுகப்படுத்துகிறது. ஏற்கெனவே ஜியோபோன் வைத்திருப்பவர்கள் கூடுதலாக ரூ.501 செலுத்தி யூடியூப், வாட்ஸ் அப் வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளும் ஜியோபோன் மான்சூன் ஹங்காமா ஆபஃரையும் அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. அப்போது, நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றுப் பேசினார்.
அவர் கூறுகையில், ''தற்போது நாடு முழுவதும் 21.50 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்துக்கு இருக்கிறார்கள். ஜியோ போனுக்கு 2.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
அடுத்ததாக ஜியோ நிறுவனம் வீடுகள், கடைகளில், சிறு, குறு வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்கக்கூடிய அதிவேகம் கொண்ட பைபர் இன்டர்நெட்டை அறிமுகப்படுத்துகிறது.
இந்த சேவை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஒரே நேரத்தில் 1,100 நகரங்களில் அறிமுகமாகிறது. இந்த சேவையில் அல்ட்ரா ஹைடெபஷினல் தொலைக்காட்சி, குரல் உதவி, விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டு, டிஜிட்டல் ஷாப்பிங் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும். இதற்கு ஜியோ ஜிகாபைர் சர்வீஸ் என்று பெயர் வைத்துள்ளோம்.
அதேபோல ஜியோ போன் அறிமுகம் செய்ய உள்ளோம். நாங்கள் அறிமுகம் செய்யும் புதிய மொபைல் போனில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூ டியூப் போன்றவசதிகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜியோபோன் வைத்திருப்பவர்கள், வரும் 21-ம் தேதி முதல் ஜியோ விற்பனை நிலையங்களில் ரூ.501 செலுத்தி புதிய செல்போனை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஜியோபோன் ஹங்காமா மான்சூன் ஆஃபர் வரும் 21-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதிதாக ஜியோ போன் வாங்குபவர்கள் ரூ.2999 செலுத்தி வாங்க முடியும்.
நாங்கள் வழங்கும் அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் மூலம், அல்ட்ரா ஹை டெபனிஷன் தொலைக்காட்சியின் மிகப்பெரிய திரைகளில் படங்கள், நிகழ்ச்சிகளைப் துல்லியமாகப் பார்க்க முடியும், வீடியோ கான்பிரன்ஸிங் நடத்தும் வசதி, குரல்உதவி, விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டு, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும்.
எங்களின் நோக்கம் இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்துவதும், அதை நோக்கி மக்களைக் கொண்டுசெல்வதும்தான். ஆதலால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், இன்டர்நெட் வசதியைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.
ஜியோ ஜிகாபைர் சேவைக்கான விண்ணப்பம் முன்பதிவு அனைத்தும் ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து தொடங்கும். மைஜியோ ஆப்ஸ் அல்லது ஜியோ.காம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
இந்த அதிவேக பிராட்பேண்ட் இணைப்புக்குத் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையாக ரூ.4500 செலுத்த வேண்டும். மாதத்துக்கு 100 ஜிபிடேட்டா, 90 நாட்களுக்கு,100எம்பிபிஎஸ் வேகத்தில் இணைப்பு கிடைக்கும். இணைப்பு தேவையில்லை என்று கூறும்போது, வைப்புத்தொகை திரும்ப அளிக்கப்படும். செப்டாப் பாக்ஸ் போன்றவை பொருத்தும் போது, அதற்கான கட்டணமின்றி பொருத்தித் தரப்படும்.''
இவ்வாறு அம்பானி தெரிவித்தார்.
Share:

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

இந்த திட்டத்தின் 45 சதவீத நீளச்சாலை அதாவது 122 கிமீ தூரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிறது. இதற்காக 96 ஊராட்சிகளில் இருந்த 860 ஹெக்டர் விவசாய நிலம் மற்றும் 18 ஹெக்டர் வனப்பகுதி நிலம் கைப்பற்றப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலம் 155 ஹெக்டர் மற்றும் விவசாயிகளின் நன்செய் நிலம் 100 ஹெக்டர், புன்செய் நிலம் 605 ஹெக்டேரும் சாலைக்காக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சுங்கவரி இல்லாத வழித்தடம்

சென்னை - விழுப்புரம் - ஆத்தூர் - சேலம் வழியாகவோ அல்லது சென்னை - வேலூர் - தருமபுரி - சேலம் வழியாகவோ சென்றால் ஒரு வாகனத்துக்கு ரூ.1000 வரை சுங்க வரி செலுத்த வேண்டும். அதேநேரம், சென்னை - தாம்பரம் - உத்திரமேரூர் - வந்தவாசி - திருவண்ணாமலை - அரூர் வழித்தடத்தில் சென்றால் சுங்கவரிக் கட்டணம் இல்லை. இது மொத் தம் 307 கிமீ தொலைவு கொண்டது. இதர 2 வழித்தடத்தை காட்டிலும் குறைவான தூரம்.
இப்போது புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டத்தை விட 30 கிமீ மட்டுமே கூடுதலாகும். இந்த தொலைவுக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டுமா. 3-வது வழித்தடத்தை விரிவாக்கம் செய்தாலும் சென்னை - சேலம் இடையே விரைவாக பயணம் செய்ய முடியும். கையகப்படுத்தப்படும் நிலத்தின் அளவும் குறைவாக இருக்கும். வனப் பகுதிகள் பாதிக்கப்படாது. திட்டத்தின் செலவும் குறையும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
நிதி இல்லை என்று கூறி திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை - செங்கம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கத் திட்டம் கடந்த 4 ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் திண்டிவனம் - திருவண்ணாமலை - ஜோலார்பேட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக் கும் திட்டத்துக்கும் மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை. இந்த 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், சென்னையில் இருந்து சேலத்தை எளிதாக சென்றடையலாம் என்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
“பசுமை வழிச்சாலை திட்டத்துக் கான 75 சதவீத நிதி உதவியை தனி யார் இரும்பு உற்பத்தி நிறுவனம் தர முன்வந்துள்ளது. அவர்களது இலக்கு கனிம வளங்களை வெட்டி எடுப்பதாகும். திருவண்ணாமலை அடுத்த கவுத்தி மலையில் உள்ள இரும்பு தாதுகளை 100 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கலாம். அதில் ரூ.1 லட்சம் கோடி லாபம் அடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சேலம் கஞ்ச மலையில் உள்ள இரும்பு தாதுவை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இரும்பு தாதுக்களை எடுக்கும்போது தொழிற்சாலை அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இரும்பு தாதுக்களை எடுத்து, கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்வது மட்டுமே நடைபெறும். கூலி வேலைக்குதான் ஆட்கள் தேவைப்படுவார்களே தவிர, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்காது.
வெட்டி எடுக்கப்படும் இரும்பு தாதுக்களை கொண்டு உலக அளவில் ராணுவ தளவாட பொருட்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்மூலம் சர்வதேச சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் தனியார் நிறுவனம் லாபமடையும். அதற்காகவே அவர்களுக்கு ஆட்சியாளர்கள் துணை நிற்கின்றனர்” என்று குற்றம்சாட்டுகின்றனர் போராட்டக்காரர்கள் .

10 லட்சம் மரக் கன்றுகள்

சுற்றுச்சூழல் ஆர்வலரான வழக்கறிஞர் பாசறை பாபு கூறும்போது, “பசுமை வழிச் சாலை திட்டத்துக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்பேடு, அ.பிஞ்சூர், சொரக்கொளத்தூர், அல்லியாளமங்கலம், முன்னூர்மங்கலம், அனந்தவாடி மற்றும் ராவந்தவாடி காப்புக்காடுகள் அழிக்கப்பட உள்ளன.
விவசாய நிலங்களில் உள்ள மரங் கள் மற்றும் வனப்பகுதியில் உள்ள மரங்கள் என சுமார் 10 லட்சம் மரங்கள் அழிக்கப்படும். ஆனால் ஆட்சியர் கந்தசாமி, ‘குறைந்த எண்ணிக்கையில் மட்டும் மரங்களை வெட்ட உள்ளதாகவும் 277 கிமீ தொலைவுக்கு 3 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும், ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரங்கள் நடப்படும், கைப்பற்றப்படும் நிலத்துக்கு ஈடாக வனத்துறைக்கு மாற்று இடம் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கிறார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக பல லட்சம் மரங்கள் அழிக்கப்பட்டன. அந்த திட் டம் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற் போது வரை சாலையின் இருபுறங்களிலும் மரங்களைக் காண முடியவில்லை. அதேபோல் சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக எத்தனை மரங்களை நடப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெப்பம் நிறைந்த பகுதி. 33 சதவீதம் காடு இருக்க வேண்டும். ஆனால் 16.8 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் மலைகளை குடைந்து, வனம் மற்றும் விவசாய நிலத்தை அழித்து சுரங்கம் வெட்டினால் எதிர்காலத்தில் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வறட்சி பகுதி என்பதால் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். வனவிலங்குகளின் உயிர் சங்கிலி அறுந்துபோகும்” என்றார்.

ஜெயலலிதா வாக்குறுதி

பசுமை வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டக் குழு துணை ஒருங்கிணைப்பாளர் அழகேசன் கூறும்போது, “இந்த சாலை வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கவில்லை. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களின் சுய லாபத்துக்காக மக்களிடம் திட்டத்தை திணிக்கின்றனர். இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் எடுப்பதற்காக சாலை அமைக்கின்றனர்.
8 வழிச்சாலையுடன் கவுத்தி மலையை இணைக்கும் ரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை அடுத்த சாலையனூர், சேலம் போன்ற முக்கிய இடங்களில் மட்டும் இணைப்புச் சாலைக்கு வழி அமைக்கப்பட உள்ளது. அதில், சாலையனூர் இணைப்பு சாலையுடன் நாயுடுமங்கலம் வழியாக இனாம்காரியந்தல் வரை தனிச்சாலை அமைக்க உள்ளனர். இனாம்காரியந் தல் கிராமம் எல்லையில்தான் இரும்பு தாதுக்களை கொண்டுள்ள கவுத்தி மலை - வேடியப்பன் மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.6600 கோடியில் கொண்டு வரப்பட்ட 4 வழிச் சாலைத் திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் கை விடப்பட்டது. அதனை புதுப்பித்து இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை என்ற பெயரில் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
கவுத்தி மலை மற்றும் கஞ்ச மலை யில் இருந்து இரும்புத் தாது எடுக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா உறுதி அளித்தார். மேலும் சட்டப்பேரவையிலும் 2014 ஜூலை மாதம் தெரிவித்தார். அவரது அறிவிப்பு அவைக் குறிப்பில் உள்ளது.

4725 டன் அரிசி உற்பத்தி அழியும்

8 வழிச் சாலையின் இருபுறங்களி லும் மதில் சுவர் எழுப்ப உள்ளனர். இதனால் ஒரு கிராமம் இரண்டாக பிளக்கப்பட்டு தொடர்பு இல்லாமல் போய்விடும். விவசாய நிலமும் இரண் டாக பிளக்கப்படுவதால், வாழ்வாதாரம் இருக்காது. ஆட்சியரின் அறிவிப்புப்படி 2,125 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதன்படி, கையகப்படுத்தப்பட உள்ள விவசாய நிலங்களில் 70 சதவீதம் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளதாக வேளாண் மைத்துறை தெரிவிக்கிறது. சாலைக் காக கைப்பற்றப்படும் நிலங்களை இழக்கும்போது, ஒரு போகத்துக்கு 4,725 டன் அரிசி உற்பத்தி அழிக்கப்படுகிறது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஒரு கிணற்றை அமைக்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை விவசாயி செலவு செய்கிறார். ஆனால் இந்த சாலை திட்டத்தால் 700 முதல் 1000 கிணறுகள் அழிக்கப்படவுள்ளன. விவ சாய நிலங்களின் சர்வே எண்கள் குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவிக்கவில்லை. கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே செங் கம் அடுத்த நீப்பத்துறையில் அளவீடு பணியை தொடங்கி விட்டனர்” என்றார்.
திருவண்ணாமலை அடுத்த காஞ்சி கிராமத்தில் வசிக்கும் விவசாயி அனந்தசயனம் கூறும்போது, “8 ஏக்கர் நிலத் தில் அரிசி சாகுபடி செய்வோம். இப் போது பசுமை வழிச் சாலையால் எனது விவசாய நிலம் இரண்டாக பிளக்கப்பட்டு, 4 ஏக்கர் மற்றும் 2 கிணறு பறிபோகிறது. எங்கள் பகுதி கிணற்று பாசனத்தை நம்பி உள்ளது. இரண்டும் கிணறும் பறிக்கப்பட்டால், மீதம் உள்ள நிலத்தில் தண்ணீர் இல்லாமல் பயிரிட முடியாது. மேலும், நிலம் பிளக்கப்பட்டு நடுப்பகுதியில் சாலை செல்லும்போது இரண்டுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்” என்கிறார் வேதனையுடன்.

நிலத்துக்கு இழப்பீடு

இதனிடையே பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடாக ஒரு ஹெக்டருக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனி சாமி அறிவித்துள்ளார். அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.8 லட்சம் வரை கிடைக் கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நிலமே எங்களது வாழ்வாதாரம் என்று கூறும் பல விவசாயிகள் அரசு இயந்திரத்துக்கு முன்னால் நிலத்தை தக்க வைக்க முடியாமல் போனால் என்ன செய்வீர்கள் என பல விவசாயிகளிடம் கேட்டோம். அவர்கள் கூறுவது இதுதான். “ஒருவேளை வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்தினால் சந்தை விலைக்கு ஏற்ப இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும்” என்கின்றனர்.
அதாவது, கிராம சாலையோரத்தில் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலம் ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும் உள் பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் நிலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையை அருகே உள்ள ஒரு ஏக்கர் நிலம் ரூ.50 லட்சத்துக்கு கூடுதலாகவும் இருக்கிறது. அதற்கு ஏற்ப தொகையை வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்தச் சாலை விளைபொருட்களை கொண்டு செல்லவா, கனிமவளத்தை எடுத்துச் செல்லவா விரைவான போக்குவரத்துக்கா என்ற கேள்விகளுக் கான விடையை, யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Share:

பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது

பசுமை வழிச் சாலை திட்டத்தை கைவிடக் கோரி திட்டமிட்டபடி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர். அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அறிந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக எம்எல்ஏ உட்பட 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி சேலத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. இதையடுத்து, நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மத்திய மாவட்டs செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட திமுக மகளிரணி, விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த திமுக-வினர் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் சுப்புலட்சுமி ஜெகதீசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு நிலம் கையகப்படுத்தப்படும் சட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ளது. விவசாயிகளிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் அவர்களது நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நில உரிமையாளர்களின் சம்மதமின்றி அவர்களது நிலத்தில் முட்டுக்கல் நடப்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக மத்திய அரசு சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கப் பார்க்கிறது.
தூத்துக்குடியில் மக்கள் ஒன்றிணைந்து போராடியதுபோல இங்கும் போராட வேண்டும். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக இருக்கும். விவசாயத்தை அழிக்கும் இத்திட்டதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டாலின் கைது செய்தி

இதனிடையே, சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அறிந்த திமுகவினர் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையிலும், வீரபாண்டி ராஜா, சிவலிங்கம் ஆகியோர் தலைமையிலும் டி.எம்.செல்வகணபதி தலைமையிலும் தனித்தனியாக மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
ஆர்ப்பாட்டம் திடீரென மறியலாக மாறியதால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, நகரின் வெவ்வேறு மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
Share:

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை; காஞ்சி மாவட்டத்தில் 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு: 42 கிராமங்கள் வழியாக 59 கி.மீ. தூரம் கடந்து செல்கிறது

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 42 கிராமங்கள் வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை இம்மாவட்டத்தில் 59 கிமீ தூரத்துக்குச் செல்வதால், இம்மாவட்டத்தில் மட்டும் 1,300 ஏக்கர் அளவுக்கான விவசாய நிலங்கள் கையகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சேலம் -சென்னை இடையே ரூ.10,000 கோடி செலவில் 8 வழி பசுமைச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தச் சாலை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை 274 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

ஆங்காங்கே எல்லை கற்கள்

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரத்துக்கு இந்தச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் தொடங்கும் இந்தச் சாலை படப்பை, குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாகச் சென்று காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் செல்கிறது.
இம்மாவட்டத்தில் 42 கிராமங்கள் வழியாகச் செல்லும் இச்சாலைக்காக சுமார் 600 அடி அகலத்தில் செல்லும் வகையில் ஆங்காங்கே கற்கள் நடப்படுகின்றன. இந்தச் சாலையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 525 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இது ஏறக்குறைய 1,300 ஏக்கர் ஆகும்.

கிணறு, ஏரி, கால்வாய் அழிப்பு

இந்தச் சாலைக்காக பல்வேறு கிணறுகள், வீடுகள், மரம், ஏரி கால்வாய்கள் அழிக்கப்பட உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் இருந்து சேலத்துக்கு விழுப்புரம் வழியாகவும், வேலூர், கிருஷ்ணகிரி வழியாகவும் 4 வழிச் சாலைகள் ஏற்கெனவே உள்ளன. இந்த இரு சாலைகளை மேம்படுத்தினாலே போக்குவரத்துக்கான தேவைகளை ஈடுகட்ட முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வழியாக புதிய 8 வழிச்சாலை அமைப்பது தேவையற்றது என்று விவசாயிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறியதாவது:
இந்த 8 வழிச் சாலையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனை எதிர்த்து, வரும் 26-ம் தேதி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டமும், வரும் ஜூலை 6-ல் இந்த எட்டு வழிச் சாலைக்கான அரசாணையை எரிக்கவும் 5 மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் நடத்தப்படும்.

5 ஆயிரம் வீடுகள் பாதிப்பு

இந்தச் சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரம் செல்வதுபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிமீ தூரமும், தருமபுரி மாவட்டத்தில் 53 கிமீ தூரமும், சேலம் மாவட்டத்தில் 38 கிமீ தூரமும், கிருஷ்ணகிரியில் 4 கிமீ தூரமும் கடந்து செல்கிறது. இத்திட்டத்துக்காக 12,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 1000-க்கும் மேற்பட்ட கிணறுகள், 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பல ஏரிக் கால்வாய்கள் அழிக்கப்பட உள்ளன.
இது காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை மட்டும் அல்ல. ஐந்து மாவட்ட விவசாயிகளின் முக்கியப் பிரச்சினை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை இந்தத் திட்டத்துக்கான தனியான வருவாய் அலுவலர் நியமிக்கப்படவில்லை.
அவர் நியமிக்கப்பட்ட உடன் யாருடைய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தும் பணியைத் தொடங்கிவிடுவார்கள். இந்தச் சாலைக்காக போலீஸாரைக் கொண்டு விவசாயிகளை மிரட்டுவதை விட்டுவிட்டு சாலை அமைக்கும் பணிகளை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மண்ணிவாக்கம் - பெருநகர்

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமதுவிடம் கேட்டபோது, “இந்தச் சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மண்ணிவாக்கம் தொடங்கி பெருநகர் வரை செல்கிறது. பாதை மட்டுமே தற்போது கூறப்பட்டுள்ளது. நில அளவீடுகள் நடைபெற்று எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் சில தினங்களில் இதுகுறித்து தகவல் தெரியவரும். ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் வட்டத்தில் அதிக இடங்கள் எடுக்கப்படும் நிலை உள்ளது. செங்கல்பட்டு வட்டத்தில் குறைந்த அளவு நிலமே எடுக்கப்பட உள்ளது” என்றார்.

ரகசிய ஆய்வு

தற்போது இந்த திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரம் செல்கிறது. இங்கு யார் வசிக்கிறார்கள்? நிலத்தின் உரிமையாளர் யார் என்பன உள்ளிட்ட விவரங்களையும், இத்திட்டத்தில் அவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா என போலீஸார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
Share:

பசுமை சாலைக்கு தொடரும் எதிர்ப்பு: தி.மலை மாவட்டத்தில் தற்கொலை முயற்சி; சேலம் அருகே 16 பேர் கைது

    பசுமை வழிச்சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு தொடர்கிறது. அதிகாரிகள் நிலத்தில் குறியீடு கற்கள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோன்று, சேலம் அருகே நிலம் அளவீடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Share: