ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு நவம்பர் 4-ம் தேதி இறுதி கெடு- முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நெருக்குதல்
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4-ம் தேதிக்குள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி கெடு விதித்துள்ளது. இராக் மற்றும் சவூதி அரேபியாவுக்கு அடுத்த படியாக ஈரானிலிருந்து மிக அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 2015-ம் ஆண்டு ஈரானுடன் போடப்பட்ட அணு ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். அத்துடன் ஈரானுக்கெதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என அறிவித்தார்.
அந்த சமயத்தில் ஈரானுடன் எத்தகைய தொழில் ரீதியான தொடர்புகளை வைத்துள்ள நிறுவனங்களும் அதை 180 நாள்களுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
பொருளாதார தடை விதிக்கப்பட்டதால், ஈரானிலிருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதன்படி ஈரானிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா மற்றும் சீனா உள்ளிட்டவை நவம்பர் 4-ம் தேதிக்குள் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வாஷிங்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஈரானுடனான தொடர்புகளை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட நாடுகளுடன் அந்நாட்டின் தேவைகளுக்கேற்ப அவற்றுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. அதேபோல ஈரானிலிருந்து ஓரளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அந்த நாடுகளுக்கு பகுதியளவில் சலுகை அளிப்பதில்லை என்ற முடிவையும் அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரானுக்கெதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடையில் ஓரளவு கூட விலக்கோ அல்லது சிறப்பு அனுமதியோ அளித்தால், தடை விதித்து நெருக்குதல் ஏற்படுத்துவதில் பயன் இருக்காது. இதனால் முற்றிலுமான தடையை செயல்படுத்த அமெரிக்கா முனைப்பு காட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை வெளியுறவுத்துறை கொள்கை மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குநர் பிரையன் ஹூக்கும் உறுதி செய்துள்ளார்.
ஈரானுக்கெதிரான தடையை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு இலக்கை எட்டவேண்டுமெனில் இத்தகைய தடை அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஈரானுக்கெதிரான அமெரிக்காவின் பொருளாதார தடையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 6 முதல் அமல்படுத்தப்படும். இந்த தடை விதிப்பானது ஆட்டோமொபைல், தங்க வர்த்தகம் மற்றும் முக்கிய உலோகங்கள் மீதானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட தடை நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இது ஈரானின் எரிசக்திக்கெதிரானதாகும். அதாவது பெட்ரோலியம் சார்ந்த கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடர்பானது மற்றும் ஈரானின் மத்திய வங்கியுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டிப்பதாகும் என்று ஹூக் கூறினார்.
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ள நாடுகளைப் பற்றிய விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு நாட்டுக்கும் சலுகையோ அல்லது சிறப்பு அனுமதியோ அளிக்கப்பட மாட்டாது, இதில் இந்தியா அல்லது துருக்கி என்ற எந்த பாகுபாடும் கிடையாது என்றார்.
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் திரும்பப் பெற்ற பிறகு, முக்கியமான நாடுகளின் தலைநகருக்கு ஹூக் பயணம் மேற்கொண்டு அதிபரின் திட்டத்தை தெரிவித்து ஈரானுக்கெதிரான தடை விதிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.
பெரும்பாலான நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிராக தங்களது ஒத்துழைப்பை அளிப்பதாக கருத்து தெரிவித்ததோடு மத்திய கிழக்கு பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதை விரும்புகின்றன. இத்தகைய நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் ஈரானுக்கெதிரான தடையை செயல்படுத்த உள்ளதாக ஹூக் குறிப்பிட்டார்.
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை முற்றிலுமாக இல்லாத நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவிலேயே இந்த இலக்கை எட்டுவோம். அதேசமயம் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதிப்படையாமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வங்கி சார்ந்த நடவடிக்கை நவம்பர் 4-ம் தேதி முதல் மேற்கொள்ளப்படுவதால் அதற்குப் பிறகு ஈரானுக்கு அமெரிக்க டாலர் கிடைக்காத சூழல் உருவாக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment