துணை நிறுவனங்களை விற்க ஏர் இந்தியா திட்டம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு பலவிதமான வாய்ப்புகளை பரிசீலித்து வந்த நிலையில், தற்போது துணை நிறுவனங்களை முதலில் விற்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியாவுக்கு ஐந்து துணை நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமாக விற்பது குறித்த பரிசீலனையில் மத்திய அரசு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை நிறுவனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை, ஏர் இந்தியாவை பலப்படுத்தும். இதன் மூலம் ஏர் இந்தியா பலமாகும், நிறுவனத்தின் மதிப்பும் உயரும் என அரசு உயரதிகாரி ஒருவர் கூறினார்.
பங்கு விலக்கல் தோல்வி
ஏர் இந்தியா பங்கு விலக்கல் முயற்சி தோல்வி அடைந்த பிறகு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜூன் 18-ம் தேதி ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நிதி மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்த முடிவு குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
கடன் ரூ.50,000 கோடி
மார்ச் 2017 வரையில் ஏர் இந்தியாவின் கடன் ரூ.50,000 கோடியாக உள்ளது. அரசின் பங்கு விலக்கலுக்கு பிறகு ரூ.33,000 கோடி கடன் ஏர் இந்தியா வசம் இருக்கும். ஏர் இந்தியாவின் கடன் காரணமாக எந்த நிறுவனங்களும் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு முன்வரவில்லை. அதனால் ஏர் இந்தியாவின் கடனை குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
துணை நிறுவனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை கடனை அடைக்க உதவும் என அரசு உயரதிகாரி கூறினார். தவிர பங்கு விலக்கல் அரசுக்கு முக்கியமானதாகும்.
நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் இதுவரை ரூ.434 கோடி மட்டுமே திரட்டப்பட்டிருக்கிறது. நிதிப்பற்றாக்குறை இலக்காக 3.3 சதவீதம் (ஜிடிபியில்) நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிதிப்பற்றாக்குறை இலக்கை அடைவதற்கு பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்டுவது அவசியமாகும்.
No comments:
Post a Comment