பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி விவகாரம்; நீரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸ்
சர்வதேச குற்றப்பிரிவு காவல்துறை அமைப்பு (இன்டர்போல்) வைர வியாபாரி நீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக (ரெட் கார்னர் நோட்டீஸ் - ஆர்சிஎன்) அறிவித்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
போலியான கடன் உத்திரவாத கடிதம் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்து ரூ. 13,578 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்திய நீரவ் மோடி அவரது சகோதரர் நீஷல் மோடி மற்றும் இவரது நெருங்கிய நண்பர் சுபாஷ் பாரப் ஆகிய மூன்று பேருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்த மோசடி, குற்றச் சதி, ஊழல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த மாதம் இன்டர்போலை அணுகி நீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் அதற்காக ஆர்சிஎன் வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ கோரிக்கை விடுத்திருந்தது.
இன்டர்போல் விடுத்த நோட்டீஸில் நீரவ் மோடி, நீஷல் மோடி மற்றும் சுபாஷ் பாரப் ஆகியோரை தேடி வருவதாகவும் தங்கள் நாட்டில் இவர்களைப் பார்த்தால் அவர்களை பிடித்து நாடு கடத்த வேண்டும் என்று 192 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கிய பிறகும் பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ள விவரத்தை இங்கிலாந்து அரசு தெரிவித்ததாக மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் தெரிவித்துள்ளார். -பிடிஐ
No comments:
Post a Comment