இந்தியா ‘ஏ’ சாம்பியன்: இங்கிலாந்து ‘லயன்ஸை’ அடக்கிய ரிஷாப் பந்த், சாஹர்
ரிஷாப் பந்தின் பொறுப்பான பேட்டிங், சாஹரின் பந்துவீச்சால், முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்திய ஏ அணி.
மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து லயன்ஸ், இந்திய ஏ அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்திய ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய ஏ அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, இந்திய ஏ அணி வீர்கள் தீபக் சாஹர், சர்துல் தாக்கூரின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் இருவர் மட்டுமே ஓரளவுக்கு ரன்களைக் குவித்தனர்.
அந்த அணி வீரர் ஹயின் சதம் அடித்து 108 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 83 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தனர். 185 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி அடுத்த 74 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்த இரு வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. இந்திய ஏ அணி தரப்பில் தீபக் சாஹர், கலீல் முகமது தலா 3 விக்கெட்டுகளையும், சர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
265 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரிதிவ் ஷா, அகர்வால் நிலைத்து ஆடவில்லை. பிரிதிவ் ஷா 15 ரன்களில் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் (20) ரன்னில் விக்கெட்டை டாஸனிடம் பறிகொடுத்தார்.
இந்தத் தொடரில் இரு சதங்கள் அடித்த மயங்க் அகர்வால் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அகர்வால் 40 ரன்கள் சேர்த்த நிலையில், டாஸன் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் அய்யர், விஹாரி கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு ஓரளவுக்கு நிலைத்து ஆடினார்கள். இந்தக் கூட்டணியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்களிலும், விஹாரி 37 ரன்களிலும் வீழ்ந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பந்த், குர்னல் பாண்டியா கூட்டணி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக ஆடிய ரிஷாப் பந்த் அரை சதம் அடித்து 62 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குர்னல் பாண்டியா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து லயன்ஸ் அணித் தரப்பில் டாஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
No comments:
Post a Comment