அதிக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் அரசுப் பள்ளிகள் தொடங்க வேண்டும்: மத்திய அரசுக்கு என்சிஇஆர்டி பரிந்துரை

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிதாக அரசுப் பள்ளிகள் தொடங்க வேண்டும் என என்சிஇஆர்டி (தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) பரிந்துரைத்துள்ளது.

நாட்டின் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் என்சிஇஆர்டி அதிகாரிகள் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். இந்த வருடம் என்சிஇஆர்டி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், முஸ்லிம்களின் தாய்மொழியான உருது மொழியை அரசுப் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. சில சமயம் முஸ்லிம், கிறிஸ்தவக் குழந்தைகள் பள்ளிகளுக்கு கொண்டுவரும் உணவுகளை மற்ற மதக் குழந்தைகள் விரும்புவதில்லை. இதனால் அந்த சிறுபான்மையினர் குழந்தைகள் சிலசமயம் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் என்சிஇஆர்டி குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து என்சிஇஆர்டி வட்டாரம் கூறும்போது, “பொது பகுதியில் உள்ள பள்ளிகளின் சுற்றுச்சூழலுக்கு பொருந்தாத நிலை சிறுபான்மையினர் இடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்து மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் பிரார்த்தனைகளை முஸ்லிம்கள் விரும்பவில்லை. கலாச்சாரம், தங்கள் மத சிந்தனைகளை இழப்பதாக அஞ்சுகின்றனர். இதைத் தவிர்க்க அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசுப் பள்ளிகளைத் திறக்க யோசனை கூறப்பட்டுள்ளது” என்றனர்.

என்சிஇஆர்டி மேலும் தனது பரிந்துரையில், ‘‘அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் பண்டிகைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும். சிறுபான்மையினரின் பண்டிகைகள் குறித்து பொதுப்பகுதியில் உள்ள பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும். பொதுப்பகுதியில் உள்ள சூழலுக்கு அஞ்சி சிறுபான்மையினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறைந்து வருகிறது. பல பள்ளிகளின் சீருடைகளையும் முஸ்லிம்களின் பெண் குழந்தைகள் கட்டாயமாக அணியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து பள்ளிகளுடன் அரசு ஆலோசனை நடத்தி குறைகளை நீக்க முடிவு எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Share:

No comments:

Post a Comment